நாளைய உதயம்

சூரியன் மறைவதால் பிறக்கும் அழகிய இருள்
போன்றதல்ல,
அவள் மறைவால் என்னுளெழும் இருள்;

மறுநாள் அவள் உதயம் வரை அவளின் நினைவென்ற
விளக்குதான்,
என்னுடல்,மனம், உயிர், முழுதும் பரவி அவ்விருளை விரட்டுகிறது;

அடடே விடிந்துவிட்டது இன்றிறவிற்க்கான ஒளியைச்
சேகரிக்க கிளம்பினேன்,
அவள் உதயத்திற்கு, அதிர்ச்சி இன்றவள் வரவில்லை
இருளதிகரித்து விட்டது அதிகாலையிலேயே;

இன்றிரவு எப்படி கடப்பதென்ற எண்ணம் ஒரு புறம்
இருக்க,
இன்றை வேகமாக தள்ளிவிட்டால் நாளைய அவளின்
உதயத்தை காணலாம் என்ற ஆவலில்;

முடிந்தமட்டு சூரியனை கிழக்கிலிருந்து மேற்கிற்கு
தள்ளிக் கொண்டிருந்தேன்,
காலம் என் வேகத்திற்கு செல்ல மறுத்து என்னைப்
பார்த்து கேலியாய் சிரித்த போது;

சூரியன் குரல் உக்கிரமாய் ஒலித்தது "அடப்பாவிகளா"
அவள் நேற்றைய உன்னுதயத்தின்,
நினைவுகளுக்கு என்னைப் பின்தள்ள,நீ நாளைய 
அவள் உதயத்திற்கு என்னை முன்தள்ளினால்;

உலகில் உங்கள் காதலைத் தவிர எனக்கு வேறு 
வேலையில்லையோ என்று,
அலுத்துக் கொண்டு அசைய முடியாமல் சிறைபட்டு
துடித்தது எங்கள் எண்ணத்தின் வலிமையால்;

இப்பொழுது நாங்கள் மூவரும் காத்திருக்கின்றோம்
எங்களின் இன்றைய மறைவிற்க்கும் நாளைய
உதயத்திற்கும்……

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..