இருளொளி..

துள்ளியெழுந்து அமர்ந்தேன் படுக்கையில், 
துயிலின் கலவரமதென்பதை உணர்ந்தேன், ஏனெனில்;

தூங்கிக் கொண்டே காலமனைத்தும் கழிந்தாற் போல், 
துக்கமான கொடுங்கனவு கலவரமூட்ட கண்விழித்தேன்;

கனவென்றதும் கான மறுத்து விழித்துக்கொண்டாயே, 
கல்லறையில் இக்கனா வந்தால்? காரிருள் வினவியது;

இக்கேள்வி மேலுமென்னை அச்சமூட்ட என்  வாழ்வின், 
இன்றுவரை நானழித்த "நொடிகள்" என்னை ஏசியது;

பகற்கனா காணும் வாழ்விழும், பழைமைப் பேச்சிலும், 
பகட்டிலும், பாழாய்ப்போன "நிமிடங்கள்" நிராகரித்தது;

எண்ணத்தையும் உடலையும் உயிரையும் சீராக்கி, 
என்னுலகு பயனுற வாழாத "மணிநேரம்" மன்னிக்காது;

நாளை செய்யலாமென்று நானமைத்த செயல்கள், 
நாட்குறிப்பிலேயே மடிந்த "நாட்கள்" நடுங்கச்செய்தது;

வெறுப்புடன் விடிந்த திங்களின் நடுவே ஞாயிருக்காக;
வெறித்து காத்திருந்த "வாரங்கள்" வசைபாடியது;

இறந்தகாலம் எதிர்காலம் பற்றி மட்டுமே கருதி;
இழந்த நிகழ்காலத்தின் "மாதங்கள்" மனங்குமுறியது;

சிறு வயதுதானே!. என்ற சிறுபிள்ளைத்தனத்தால், 
சிறுத்தையாய் கடந்த "ஆண்டுகள்"அச்சுறுத்தியது;

இவ்விருள் வினவியதால் விழித்த என் உள்ளொளி,
இவ்வையகம் தழைக்க வாழ வாய்ப்பு "நேரமென்றது"!;

உறங்கிக் கழிக்கவோ, உட்கார்ந்து போக்கவோ, 
உருவாக்கப்பட்டதல்ல "நேரம்" உழைத்துக் கழிக்கவே!.. ;

வரவிடப்பட்ட காலத்தின் செலவுகள் செம்மையானால், 
வாழ்நாட்களனைத்தும் எழுதப்படும் வரலாற்றில்!.. ;

இருளகன்று ஒளி வீசியது, விடிந்தது புலனாயிற்று, 
என்னுள் உள்ளொளியால், வெளியில் ஞாயிற்றால்!..... 

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

நாளைய உதயம்