என் எழுத்துரிமை
இலக்கியம் இயலாதவனாக இருப்பவன்தான்
இருப்பினும் இச்சையால் இயற்றுகிறேன்;எனினும்
என்னுள் எழும் எதார்த்தமான எழுத்துக்களை
எழுத்தறிவாளன் ஏற்ப்பானா?.. இல்லை
சொல் பொருள் மரபு வாக்கிய பிழையென்று
சொல்லி ஏற்க்க மறுப்பானா?... இப்படி
யோசித்தால் யோகமாய்ப் பெற்ற ஞானம்
யாருக்கும் பலன் கொடுக்குமா?... உண்மை
உயிரிலிருந்து உதிக்கும் உன்னதங்களை
உலகுக்கு உரைப்பது தவமல்லவா?...சொல்
புதிதாய்ப் புத்துயிர்ப்புற்று புதை மண்ணிலிருந்து
புதுமையில் பூப்பது தவறாகுமா?... அறம்
மதியிலந்து மனிதனை மனிதன் மாய்க்கின்ற
மரபிற்கு அறம்பாடுதல் பாவமாகுமா? பொருள்
பொக்கிஷம் போலல்லாமல் பாமரனும்
பெறும் பேராவது பெருமையல்லவா?...இன்பம்
கற்ப்பியல் களவியலுடன் என் கற்பனையியலும்
கலந்து கவிபாடக் கிடைக்காதா?... வாக்கியம்
வாசிப்பவனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்
விளக்காக விளங்கினால் போதாதா?...கவிதை
கேட்டவனின் கேட்ட நொடியை கோடிட்டு
காக்கும் ரசனையானால் பற்றாதா?... கதை
கடலெனக் கிடக்கும் கதாபாத்திரங்களில் என்
கதாபாத்திரம் கலப்பது கலப்படமோ?... எழுத்து
மக்களை மகிழ்வித்து மானுடத்தைச் சீர்திருத்தி
சிந்திக்கத் தூண்டும் கருவியாயிருப்பின்
அதை ஏந்துவது என்
கடமையல்லவா?..........
Comments
Post a Comment