என் விடுதலை...

குழந்தை பருவத்தில், 
குடும்ப பிரச்சினை உதித்தது;

வாலிப பருவத்தில், 
வலியுடன் உறவுகள் முறிந்தது;

படிக்கும் படிப்பில், 
பணத்தாள் தலையிட்டது;

குடும்பச் சுமை, 
குற்ற உணர்ச்சியின்றி தலையில் விழுந்தது;

வாய்த்த காதலும், 
வறுமையால் வீழ்ந்தது;

சொந்த சோகங்கள், 
சொந்தபந்தங்களுக்கு வெறுப்பேற்றியது;

சொல்லி அழக்கூட, 
சொந்தமில்லா நிலை ஏற்பட்டது;

நட்பே அனைத்துமாகி, 
அந் நட்புடன் நாடெங்கும் சுற்ற சுகமுண்டானது;

பேதமில்லா நட்புறவில், 
போதையின் அனைத்து ரகமும் கண்டறியப்பட்டது;

சமுதாய கோட்பாட்டில், 
சற்றும் நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டது;

சுடர் விடும் உள் ஒளி, 
சுட்டெரிக்கவே தேடல் தோன்றியது;

புத்தகத்தின் அரவணைப்பால், 
பூவுலகில் என் அறியாமை அறுக்கப்பட்டது;

உள்கடந்து சென்றதால், 
உயிரின் உண்மையும் அறிமுகமானது;

பேரமைதி மட்டுமே, 
பேரியக்கத்தின் உண்மையான தேடலானது;

சோகங்கள் சோகங்களல்ல, 
சோர்வுறும் போது எழுப்பும் மருந்தானது;

வலிகள் வலிகளல்ல, 
வசந்தங்கள்  பிறக்கும் வழியானது;

வீழ்ச்சிகள் வீழ்ச்சிகளல்ல, 
வளர்ச்சியில் கண்காணிக்கும் விழிப்புணர்வானது;

எண்ணமில்லா நிலை, 
எல்லைகளற்ற பேரறிவிற்கு விதையானது;

உண்மைத் தேடல், 
ஊக்கம் ஊற்றெடுக்கும் நீரானது;

அனுபவங்கள் அனைத்தும், 
ஆண்டவனை அறிவதற்குண்டான வேரானது;

இம்மரத்தின் வளர்ச்சி, 
இவ்வியற்கையின் பேராற்றலில் காத்திருக்கிறது;

இவ்வுண்மை உரைத்திடவே, 
இம்மாயை அனைத்தும் விடுதலை பெற்றது
                        என்னுள்ளிருந்து!!!... 

Comments

Popular posts from this blog

மனங்கொள்ளாமை...

இருளொளி..

நாளைய உதயம்